– பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் ஏப்ரல் 14, 2022 அன்று, இங்கிலாந்திற்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு பிரிட்டன் அரசாங்கம் அனுப்பும் என்று அறிவித்துள்ளார் –
ஜனவரி 1, 2022க்குப் பிறகு பிரித்தானிய நாட்டிற்கு சட்டவிரோதமாக வந்து அரசியல் தஞ்சம் கோரும் அகதிகளை ருவாண்டா நாட்டிற்கு ஒருவழிப் பயணச் சீட்டின் மூலம் வலுக்கட்டாயமாக அந்நாட்டிற்கு அனுப்புவதற்கு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் அவர்கள் அந்நாட்டுடன் ஒப்பந்தம் இட்டுள்ளார். பிருத்தானியாவிலுருந்து அனுப்பப்படுவோரின் அகதி அந்தஸ்து விண்ணப்பம் ருவாண்டா நாட்டில் பரிசீலிக்கப்படும். அவர்கள் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டால், அவர்களுக்கு ருவாண்டாவில் 5 ஆண்டுகள் அகதி அந்தஸ்து வழங்கப்படும்.
பிரித்தானிய நாட்டின் பிரதமர் சட்ட விரோதமாக வரும் அகதிகளின் எணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு இது ஒரு புதுமையான அணுகுமுறை என்று கூறியுள்ளார். ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் எண்ணம் கொண்ட அகதிகளுக்கு இந்த ஒப்பந்தம் பயத்தை ஏற்படுத்தும், அதனால் அவர்கள் சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையத் தயங்குவார்கள் என பிரித்தானிய அதிகாரிகள் நம்புகிறார்கள்.ஆனால் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் இந்தத் திட்டம் ஒரு மனிதாபிமானமற்ற செயல் என்று ஐக்கிய நாடுகளின் சபை குற்றம்சாட்டியுள்ளது. இத்தகைய திட்டங்கள் புலம்பெயர்ந்தோருக்கு மறுவாழ்வு அளிப்பதை விட பெரிய அளவிலான கொடுமைகளை மட்டுமே செய்கின்றன என்று பல மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
UNHCR இன் பாதுகாப்புக்கான உதவி உயர் ஆணையர், Gillian Triggs அவர்கள் , “போர், மோதல் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றிலிருந்து தப்பியோடிய மக்கள் இரக்கத்திற்கும் அனுதாபத்திற்கும் தகுதியானவர்கள். அவர்களை பொருட்களைப் போல வர்த்தகம் செய்யக்கூடாது மற்றும் செயலாக்கத்திற்காக வெளிநாடுகளுக்கு மாற்றப்படக்கூடாது.” என்று கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவதற்கான அனைத்து உரிமைகளும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு உண்டு. ஆனால் சட்டவிரோதமான செயல்களையும், மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்காத நாட்டில் அடைக்கலம் தேடி தங்கள் உயிரை பாதுகாக்க வரும் அகதிகளை அனுப்புவது மிகவும் வேதனைக்குரிய செயலாகும். இது மனித நேயத்திற்கு புறம்பான செயலாகும். ருவாண்டா நாட்டின் மனித மீறல்களை குறித்து பிரித்தானிய அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் கண்டித்துள்ளது.
ஆனால் போரிஸ் ஜான்சனின் அரசாங்கம் எதுவிதமான விமர்சனைங்களையும் பொருட்படுத்தாமல் 158 மில்லியன் டாலரை முன்பணமாக ருவாண்டன் அரசாங்கத்திற்கு செலுத்தியுள்ளது. இந்த பணம் எதற்காக கொடுக்கப்பட்டது? பணம் கொடுக்கப்பட்ட காரணத்திற்கு பயன்படுமா? என்று பல கேள்விகள் பிரித்தானிய பொது மக்களால் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூரமான திட்டத்தை நிறுத்துவதற்காக, ஒரு சர்வதேச அரசு சாரா நிறுவனமான International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG) ஆன்லைன் கையொப்ப பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து இந்த மனுவில் கையெழுத்திடுவதன் மூலம் ஆன்லைன் கையொப்ப பிரச்சாரத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்.