யாழ்ப்பாணம், திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்கள் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் போலீஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தனது மகன் சந்தேகத்தின் பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 4 நாட்களுக்கு மேல் தடுத்துவைத்து விசாரணை செய்த பின்னரே நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மல்லாகம் நீதவான் நீதிமன்றின் உத்தராவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே 20/11/2023 அன்று உயிரிழந்தார். சித்தன்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த நாகராஜ அலெக்ஸ் ( வயது 25 ) என்பவரே உயிரிழந்தார். சிகிச்சசைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்படட பின்னர் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் உள்ளிட்ட இருவர் கடந்த வாரம் திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் நான்கு நாட்களாக வட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவுமில்லை – விடுவிக்கப்படவும் இல்லை என்பதனால் அச்சமடைந்த தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார். அதனால் கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்று கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட்னர்.
பொலிஸாரினால் ஆட்சேபனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
இருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறைக்காவலரின் காவலுடன் உயிரிழந்த சந்தேக நபர் சிகிச்சசைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். சிகிக்சை பலனின்றி அவர் கடந்த 20 ம் திகதி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் உடற் கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சிறுநீரகம் செயலிழந்து உயிரிழப்பு
பாதிக்கப்பட்டவர் சிறையில் இருந்தபோது திடீரென சுகவீனமடைந்து சிகிச்சை பெற்று மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், மீண்டும் நோய்வாய்ப்பட்டு நவம்பர் 19ஆம் திகதி யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞரின் மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரியொருவர் யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த இளைஞன் தாக்குதலுக்கு உள்ளான காயங்களினால் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.